தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 92. தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வந்த கே. விஸ்வநாத் பத்மஸ்ரீ விருது, தாதா சாஹப் பால்கே விருதுகளை வென்றுள்ளார்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பெடிபுல்லிபாரு என்ற ஊரில் 1930இல் பிறந்த இயக்குநர் கே. விஸ்வநாத், 1965ஆம் ஆண்டில் இயக்குநராக அறிமுகமானார். தனது படங்கள் மூலம், பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, நிகழ்த்துக் கலைகள் சம்பந்தப்பட்ட படைப்புகள் எனப் பல சமுக விஷயங்களை பேசி இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை கமலை வைத்து இயக்கியுள்ளார்
தெலுங்கு, இந்தி மொழிகளில் படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில் கமல்ஹாசன் – அர்ஜுன் நடித்த குருதிப்புனல் படம் மூலம் நடிகராக தோன்றினார். இதன் பின்னர் அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் பகவதி, புதிய கீதை, தனுஷுடன் யாரடி நீ மோகினி, விக்ரமுடன் ராஜபாட்டை, ரஜினியுடன் லிங்கா போன்ற படங்களில் நடித்தார்.
கடைசியாக இவர் தமிழில் கமல், இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோருடன் இணைந்து உத்தமவில்லன் படத்தில் நடித்தார். இயக்குநர் கே. விஸ்வநாத் மறைவுக்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
