மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துத் தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சார்ந்த திட்டப் பலன்களும் பொதுமக்களுக்கு விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களை மாவட்ட வாரியாகப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து ஜூன் 2, 2026 (பரபாவ, வைகாசி – 19, திருவள்ளுவர் ஆண்டு – 2057) தேதியிட்ட பொது (சிறப்பு-ஆ)த் துறையின் அரசாணை பக்கங்களின் விவரங்களின்படி, மாவட்ட அளவில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம் மற்றும் நோய்த்தொற்று போன்ற இடர்பாடான சூழ்நிலைகளில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் N. ஆனந்தும், சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்குப் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், மயிலாடுதுறைக்கு உணவுத் துறை அமைச்சர் P. வெங்கடரமணனும், திருவள்ளூர் மாவட்டத்திற்குச் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரா. குமாரும், திருநெல்வேலிக்கு நிதி அமைச்சர் நெ. மரிய வில்சனும், பெரம்பலூருக்குப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காஞ்சிபுரத்திற்கு க. தென்னரசு, திருப்பத்தூருக்கு R.V. இரஞ்சித்குமார், செங்கல்பட்டிற்கு த. சரத்குமார், கள்ளக்குறிச்சிக்கு வன்னி அரசு, இராணிப்பேட்டைக்கு வ. காந்திராஜ், தருமபுரி மற்றும் அரியலூருக்கு ப. ராஜ்குமார், நாகப்பட்டினத்திற்கு A.M. ஷாஜகான், தஞ்சாவூருக்கு வினோத், திருச்சிக்கு ரமேஷ், கரூருக்கு சி. விஜயலக்ஷ்மி, நாமக்கல்லிற்கு த. லோகேஷ் தமிழ்செல்வன், திருப்பூருக்கு டாக்டர் K.G. அருண்ராஜ், நீலகிரிக்கு செ. கமலி, வேலூருக்கு ம. விஜய் பாலாஜி, ஈரோட்டிற்கு K.A. செங்கோட்டையன், கோவைக்கு வே. சம்பத்குமார், மதுரை மற்றும் தேனிக்கு R. நிர்மல்குமார், புதுக்கோட்டைக்கு ஜா. முகமது பர்வேஸ், சிவகங்கைக்கு டாக்டர் TK. பிரபு, கிருஷ்ணகிரிக்கு S. கீர்த்தனா, விருதுநகருக்கு கு. ஜெகதீஸ்வரி, திருவாரூருக்கு பெ. விஸ்வநாதன், தூத்துக்குடிக்கு ஸ்ரீநாத், இராமநாதபுரத்திற்கு பெ. மதன் ராஜா, சேலத்திற்கு ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், கன்னியாகுமரிக்கு செ. ராஜேஷ் குமார், தென்காசிக்கு ராஜீவ் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மதுவிலக்குத் துறை அமைச்சர் க. விக்னேஷ் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் அனைவரும், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் (Monitoring Officers) மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் இணைந்து, திட்டப் பணிகளைத் துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்குச் சென்றடைவதைக் கண்காணித்தல் மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணம் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தலைமைச் செயலாளர் மு. சாய் குமார் வெளியிட்டுள்ள இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

