சென்னையில் பழம் விற்கும் மூதாட்டி ஒருவரிடம் சிறுவர்கள் விளையாடும் 500 ரூபாய் காகித நோட்டைக் கொடுத்து ஏமாற்றிய நபரை, சென்னை பெருநகர காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
திருவொற்றியூர் பகுதியில் பழம் விற்று வரும் மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் போலி நோட்டைக் கொடுத்து ஏமாற்றிவிட்டுச் சென்ற செய்தி ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மூதாட்டியின் புகாரின் பேரில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர்.

அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்த போலீசார், குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஏழ்மையிலும் நேர்மையாக உழைக்கும் தன்போன்றவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை உணர்ந்து, துரிதமாகச் செயல்பட்டு நீதி வழங்கிய காவல் துறையினருக்கு அந்த மூதாட்டி கண்ணீர் மல்க நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

