Home Uncategorized மதுபோதையில் கார் ஓட்டினேனா? – யாஷிகா ஆனந்த்

மதுபோதையில் கார் ஓட்டினேனா? – யாஷிகா ஆனந்த்

கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாஷிகா மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாகவும், அதனால் விபத்தில் சிக்கியதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில், இதுகுறித்து நடிகை யாஷிகா விளக்கம் அளித்துள்ளார். 

அவர் பதிவிட்டிருப்பதாவது: “சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். கார் ஓட்டும்போது நான் மது அருந்தி இருந்ததாகப் புரளிகளைக் கிளப்பும் மலிவான நபர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நான் மது அருந்தவில்லை என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. அப்படி நான் மது அருந்தி இருந்தால் இப்போது மருத்துவமனையில் இருந்திருக்க மாட்டேன், சிறையில் தான் இருந்திருப்பேன்.

போலியான நபர்களால் போலி செய்திகள் பரப்பப்படுவது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. ஆனால், இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். இதில் கொஞ்சம் மனிதத் தன்மையையும், இறந்த என் தோழிக்காக கொஞ்சம் துக்கத்தையும் காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மருத்துவர்களின் அறிக்கையும் இதையே தான் சொல்லும். போலியான ஊடகங்கள், அதிக பார்வைகளைப் பெற இப்படி போலியான செய்திகளைப் பரப்புவதாக சாடியுள்ள யாஷிகா, 2 வருடங்களுக்கு முன்பே தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக சிலர் மீது அவதூறு வழக்கு தொடுத்ததாகவும்” அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது தற்போதைய உடல்நிலை குறித்துப் பகிர்ந்திருக்கும் யாஷிகா, “அறுவை சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் இருக்கிறேன். அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. அதிர்ஷ்டவசமாக முகத்தில் காயம் ஏற்படவில்லை” என அவர் கூறியுள்ளார்.

Exit mobile version