நாள்தோறும் நம்மைச் சுற்றிலும் பல சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் சில மனதில் பதியும். பல பதியாது. ஆனால் மனதில் பதிந்தும் பதியாதது போல் நாம் எளிதாக கடந்து போகும் ஒரு சில விஷயங்களில் ஒன்றுதான், “தெருநாய்கள்” எனப்படும் நாட்டு நாய்கள்.
இந்த நாட்டு நாய்கள் எனப்படும் இனம் படும்பாடு, அடைகின்ற கேவலம், உணவுக்கு ஏங்கித்திரியும் அவலம் போன்றவற்றை எண்ணிப்பார்க்கும்போதும், அதனை நேரில் காணும்போதும், இதயம் கனத்துப் போகிறது.
சென்னை மாநகரிலும் சரி… தமிழகத்தின் பிற நகர்புற மற்றும் கிராமப்புறங்களிலும் சரி…”இந்துசமயம்” காவல் தெய்வமாக அடையாளம் காட்டும் பைரவர் எனப்படுமிந்த நாட்டு நாய்களே பெரும்பாலுஇம் காவல்தெய்வங்களாக விளங்கி வருகின்றன.
அந்நிய நாட்டு இறக்குமதிகளான பல்வேறு இனத்தைச்சேர்ந்த நாய்கள் இராணுவத்துறை மற்றும் போலீஸ்துறையில் பெரும்பாலும் குற்றவாளிகளை அடையாளம் காண பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், நாட்டு நாய்களால் குற்றங்கள் எங்கும் நடைபெறாத வண்ணம் தடுக்கப்படுகின்றன.
ஆம்… பகலிலோ அல்லது இரவிலோ நாட்டு நாய்களின் நடமாட்டமானது ஒரு தெருவில் இருந்து கொண்டிருந்தால் போதும். அங்கே திருட்டு பயம் இருப்பதில்லை. அந்த ஏரியாவிற்கு புதிய குரல், வாகனம், புதிய அணுகுமுறையுடன் ஒரு காய்கறிக்காரரோ , பழவண்டிக்காரரோ, தலையில் சுமந்து ஏதேனும் வியாபாரம் செய்பவரோ என எவரேனும் வந்து விட்டால் அந்த ஏரியாவே அமளித்துமளியாகும். நாட்டு நாய்கள் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்து இடைவிடாமல் குரைக்கின்றன. அதேநேரம் அந்த தெருவாசிகள் அந்த வியாபாரிகளிடம் பேச்சுக்கொடுத்து வியாபாரம் செய்யத்தொடங்கும்போது, அந்த நாய்களை ஒரு அதட்டுப்போடுவதுண்டு. இதுபோல் மேலும் இருதினங்கள்தான். பிறகு அந்த நாய்கள் பழகிவிடும். அந்த வியாபாரிகளை தொந்தரவு செய்வதில்லை.
ஆனாலும், பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்குபவர்களையோ, அந்தத்தெருவின் வழியே பீதியூட்டும் வகையில் அதிக இரைச்சலுடன் செல்லும் இருசக்கர வாகனங்கள், கார்களை அந்த நாட்டு நாய்கள் விடுவதேயில்லை. இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரின் கால்களைக் குறி வைத்து கூடவே ஓடுகின்றன. கார்கள் என்றால் அந்த கார்களின் டயர்களை குறி வைத்து குரைத்துக் கொண்டே ஓடுகின்றன.
நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் பேத்தி ஒரு நாட்டு நாயை எங்கிருந்தோ தூக்கி வந்தாள். மெல்ல மெல்ல எங்களுடன் அது பழகியது. இப்போது அது வீட்டு நாயுமில்லை. தெருநாயுமில்லை. அப்படித்தான் ஜீவிக்கிறது. அதனிடம் சில விசித்திரமான குணம் உண்டு. தனது பசியை அது குறிப்பால் நமக்கு உணர்த்தும். அதற்கு சாதம் வைத்தபின் , நம்மைப் பார்த்தே, ஒருமுறை”உர்”ரென்று உறுமும். அதாவது அது உணவை நாம் மீண்டும் எடுத்துவிடுவோமோ… என்கிற பயம்.
அடுத்து நாம் எங்காவது புறப்பட்டு, அதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க முனைந்தால் அவ்வளவுதான் . தெருவின் இருபுறமும் ஓங்கிய குரலில் குரைத்தபடியே வலதும், இடதுமாக ஓடும். அப்போது தெருவில் நடந்து கொண்டிருப்போர், வாகனங்களில் செல்வோர் ஆகியோரைப் பார்த்துக் குரைக்கும். நாம் ஒரு அதட்டு போட்டுவிட்டு புறப்பட்டுச் சென்றால் போதும். உடனே தனக்கான இடத்திற்குச் சென்று படுத்துக்கொள்ளும்.
ஆரம்பத்தில் இது புரியவில்லை. மெல்ல மெல்ல உன்னிப்பாக கவனித்தபின் புரியத் தொடங்கியது. அதாவது ஒரு பணக்காரர் வீட்டில் அல்லது ஒரு நிறுவனத்தின் முதலாளி காரில் தன் பங்களா அல்லது அலுவலகத்திலிருந்து வெளியேறும்போது, அங்கு வாசலில் நிற்கும் செக்யூரிட்டி, பரபரப்பாகி இரும்புக்கதவுகலைத் திறந்து விட்டு, சாலையில் செல்லும் வாகனங்களை மடக்கி நிறுத்தி, சற்று வழி ஒதுக்கி தன் முதலாளியின் கார் எளிதாக அவ்விடத்தைக் கடக்க தன் கடமையாற்றி, அவர்க்கு சல்யூட் செய்து நின்று விட்டு, மீண்டும் தனக்கான ஸ்டூலில் அமர்ந்து ஆசுவாசப்படுவாரோ… அதே போன்ற செய்கைதான் அந்த நாயுடையது.
(அதற்காக செக்யூரிட்டிகளை இந்த எழுத்தாளர் “நாய்” என்று சொல்லிவிட்டான் என என்மீது வழக்கு போடச்சென்றுவிடாதீர்கள்.)
ஒருமுறை எங்கள் பகுதியில் நள்ளிரவில் இடைவிடாமல் தெருநாய்கள் பல சேர்ந்து, கூட்டமாக குரைத்தன. அப்போது தூக்கம் கலைந்து ஒரு வீட்டுக்காரர் மட்டும் எழுந்து வந்து பார்க்க, அங்கே எதிர்வீட்டு வாசலில் நின்ற இருசக்கர வாகனத்தைத் திருட இருவர் முயற்சித்துக் கொண்டிருந்தனர். இவர் சப்தம் போட, அந்த வீட்டுக்காரர்களும் எழுந்திருக்க, திருடர்கள் “டர்ர்ர்ர்ர்ர்ர்ர்………ராகி” ஓடத்தொடங்க, அந்த நாய்கள் அவர்களைத் துரத்த, அவர்கள் தார் ரோட்டில் விழுந்து புரண்டு கைகால்கள் சிராய்ப்புகளுடன் தப்பித்து ஓடி ஒளிந்தனர். அவர்களை ஓட ஓட விரட்டிய வெற்றிக்களிப்புடன் நமது பைரவவீரர்கள் அனைவரும் திரும்பி வந்து அவரர் இடத்துக்குச் சென்றுவிட்டனர்.
பலநேரங்களில் ஏதாவது ஒரு பகுதிக்குச் சென்றிருக்கும்போது, அங்குல்ள ஏதாவது ஒரு பெட்டிக்கடையில் புகை பிடிக்கவோ, குளிர்பானம் அருந்தவோ, அல்லது ஒரு டீக்கடையில் டீ குடிக்கவோ நிற்கக்கூடும். அந்த நேரத்தில் நீங்கள் தெருவில் திரியும் நாட்டு நாயைக் காண்பீர்கள். அதுவும் உங்களை ஒரு மாதிரியாகப் பார்க்கும். உடனே அவற்றிற்கு ஏதாவது பிஸ்கட்டை ஆசையோடு போட்டாலும், உடனே அது அந்த பிஸ்கட்டுகள் மீது வாய் வைக்காது. சற்று போக்கும் வரத்துமாக இருக்கும். ”பிஸ்கட் போட்ட ஆசாமி முதலில் கிளம்பட்டும்” என கண்காணிக்கும். நாம் நகரத்தொடங்குவது உறுதியான பின், மெல்ல அந்த பிஸ்கட்டை நோக்கி நடக்கத்தொடங்கும். அதன்பின் வேறு நாய்கள் அதை கவ்வுவதற்குள் தானே தின்று முடிக்கும்.
இதுபோன்று ”தனக்கு இந்த நேரத்தில், இந்த இடத்தில் இந்த நபரிடமிருந்து பிஸ்கட் கிடைக்கும்” என உறுதி செய்து கொண்டு, மறுநாளும் அதற்கும் மறுநாளும் சற்று தொலைவிலிருந்து கண்காணிக்கும்.
குறிப்பிட்ட நேரத்தில் நாம் செல்வோம். இப்போது நம்மை நோக்கி முன்னேறி வந்து நின்று நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் வாலை ஆட்டும். சில நேரம் எழுந்து எழுந்து அமரும். இப்போது நாம் வாங்கிப்போடும் பிஸ்கட்டை நம்மையும் பிஸ்கட்டையும் மாறி மாறி பார்த்த
