தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கில் தமிழசு அரசு தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து, கடந்த 21-ந் தேதி முதல் மீண்டும் சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கியது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பயண அட்டை உபயோகிக்கும் பயணிகளுக்காக கொரோனாவால் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு காலமான மே 10-ந் தேதி முதல் ஜூன் 20-ந் தேதி வரை பயணிகள் பயன்படுத்தாத பயண அட்டைகளில் உள்ள பயண எண்ணிக்கையை, அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பு செய்துள்ளது.
ஆகவே, பயணிகள் தங்கள் பயண அட்டையில் உள்ள பயண எண்ணிக்கையின் அளவை நீட்டித்துக்கொள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகலாம். முறையே கொரோனா ஊரடங்கு காலத்தில் கியூ.ஆர். குறியீடு பயண சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடியாகும் கால அளவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் இன்றைய தினம் முதல் நீட்டித்து செய்யப்படுகிறது.
மேலும், மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முக கவசம் அணியாவிட்டாலோ அல்லது முக கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. அனைத்து பயணிகளும் முக கவசத்தை சரியாக அணிந்துள்ளனரா? என்பதை கண்காணிக்க குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் முக கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 19 பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.3,800 வசூலிக்கப்பட்டுள்ளது.
