வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் வசூல் முகவர்கள் வாடிக்கையாளர்களைத் தரக்குறைவாக நடத்துவதையும் அச்சுறுத்துவதையும் தடுக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடன் வசூல் முகவர்கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே கடனாளிகளைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும், நேரில் செல்வதற்கு ஒரு நாள் முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடன் வாங்கியவர்களை மிரட்டுவது, தரக்குறைவாக நடத்துவது, குடும்பத்தினரை அச்சுறுத்துவது மற்றும் சமூக வலைதளங்களில் அவமானப்படுத்துவது போன்ற செயல்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வசூலுக்கு வரும் முகவர்கள் கண்டிப்பாகத் தங்களின் அடையாள அட்டை மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரக் கடிதத்துடன் மட்டுமே வர வேண்டும்.
கடன் தவணை 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் மட்டுமே கடனில் வாங்கிய மொபைல், டேப்லெட், லேப்டாப் போன்ற சாதனங்களை முடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; அதேவேளையில், நிலுவைத் தொகையைச் செலுத்திய ஒரு மணி நேரத்திற்குள் அந்தச் சாதனங்களை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், இதில் தாமதம் ஏற்பட்டால் தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ₹250 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

