கோவையில் மக்கள் ஆசி யாத்திரையை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம் கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
75-வது ஆண்டு சுதந்திர தின வரலாற்றில். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் மத்திய மந்திரியானது இதுதான் முதல் முறை. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் ஆசி யாத்திரை கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றிதான் நடத்தப்படுகிறது. பெகாசஸ் டெலிபோன் ஒட்டுக்கேட்பு என்பது, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறுகிறார்கள். இது உண்மை இல்லை.
தி.மு.க.வின் 100 நாள் ஆட்சியில், அவர்கள் சொன்னதை செய்யவில்லை. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுப்பதாக கூறினார்கள். இன்னும் கொடுக்கவில்லை. கல்விக்கடனை ரத்து செய்வதாக கூறினார்கள். இன்னும் ரத்து செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிக்கையில் சாத்தியம் இல்லாததை கூறி தி.மு.க.வினர் ஓட்டு பெற்றுள்ளனர். தேர்தல் அறிக்கையில் கூறியதால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் மட்டும் குறைத்துள்ளனர். கொங்கு நாடு குறித்து நாங்கள் கூறவில்லை. இதனை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நல்லதை செய்தால் தி.மு.க.வை பாராட்டுவோம். வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் குற்றம்சாட்டுவோம். சர்வதேச விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இருக்கும். தேர்தல் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் சொன்னது அவருடைய கருத்தாகும். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது. சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி அவர் அதை எதிர்கொள்வார் என தெரிவித்தார்.

