தமிழ்நாட்டில் புதிய டி.ஜி.பி.யாக பதவி ஏற்றுக்கொண்ட சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் பணி எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது அரிய வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை அளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றவும், குற்றங்களை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் முதலமைச்சரிடம் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும்.
30 நாளில் இது தொடர்பாக முதலமைச்சரிடம் அறிக்கை வழங்கப்படும். காவல் துறையினரும் பொதுமக்களும் நல்லுறவோடு செயல்படவேண்டும். காவலர்கள் பொதுமக்களை மனிதாபிமானத்தோடும், மரியாதையோடும் நடத்தவேண்டும்.
மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படக்கூடாது. காவல் துறையினரின் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

