Home செய்திகள் போதிய பேருந்துகள் இல்லை..வாக்களிக்க முடியாமல் கோவை மக்கள் தவிப்பு!

போதிய பேருந்துகள் இல்லை..வாக்களிக்க முடியாமல் கோவை மக்கள் தவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், கோயம்புத்தூர் சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள கடும் பேருந்து தட்டுப்பாடு காரணமாக வாக்காளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மதுரையைச் சுற்றியுள்ள தென் மாவட்டங்களுக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள், மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்து நள்ளிரவு முதல் அதிகாலை வரை திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

“தேர்தல் நாளையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்த அரசு, போதிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டது. ஓட்டுப் போடச் செல்லும் ஆர்வத்துடன் வந்த எங்களைச் சாலைகளில் தவிக்க விடுவது நியாயமா?” என்று பயணிகள் குமுறி வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலரும் இன்னும் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் அவலநிலை நீடிக்கிறது. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாகக் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று மாலைக்குள் வாக்களிக்க முடியும்.

Exit mobile version