தமிழகச் சட்டமன்றத்தில் சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு (Floor Test) அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மெஜாரிட்டி டெஸ்ட் நடைமுறையின்படி, முதலில் முதல்வர் ஜோசப் விஜய் தனது அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்வார்.
இதன் மீதான விவாதத்திற்குப் பிறகு, தீர்மானத்தைச் சபாநாயகர் வாக்கெடுப்பிற்கு முன்மொழிவார். இதில் ‘குரல் வாக்கெடுப்பு’ (Voice Vote) நடத்தப்பட்டால், எம்.எல்.ஏக்கள் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று முழங்கித் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்; ஒருவேளை இதில் தெளிவான முடிவு எட்டப்படவில்லை எனில், ‘டிவிஷன்’ (Division) முறை கடைப்பிடிக்கப்படும்.
இதற்காகச் சட்டமன்றத்தில் உள்ள ஆறு பிரிவுகளுக்கு ஏற்ப, தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என எம்.எல்.ஏக்கள் தனித்தனியாக எழுந்து நின்று தங்கள் வாக்கினைப் பதிவு செய்வர்.
பின்னர், ஒவ்வொரு பிரிவிலும் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை துல்லியமாகக் கணக்கிடப்பட்டுச் சபாநாயகரிடம் வழங்கப்படும். இறுதியாக, பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பின், முதல்வர் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாகச் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

