குழந்தை பேறு அருளும் சீர்காழி சட்டை நாதர் கோவில் – அறந்தாங்கி சங்கர்
இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்திலே சிவபெருமான் கோவில் கொண்ட எத்தனையோ தலங்கள் அமைந்திருக்கின்றன… ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்றவை..
அற்புதங்கள் நிகழ்ந்தவை …அவற்றில் ஒரு அற்புதமான திருத்தலமான சீர்காழி சட்டைநாதர் கோவில் பற்றி இந்த பதிவிலே காணலாம்…
காவிரி வடகரை பதினான்காவது தலம் சீகாழி எனப்படும் சீர்காழி ஆகும்..
மூலவர் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் என்ற பெயர்களிலும் அம்பாள் பெரியநாயகி என்கிற திருநிலைநாயகி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்கள்…
இந்த சீர்காழி திருத்தத்தின் தலமரம் மூங்கில்…. பாரிஜாதம்,பவளமல்லி.. ஆகும்..
தீர்த்தம்: பிரம்மதீர்த்தம் முதலான 22 தீர்த்தங்கள் ..
இந்த சீர்காழி திருத்தலத்தின் புராண பெயர் : பிரம்மபுரம், சீகாழி..தற்போதைய பெயர் : சீர்காழி என்று அழைக்கப்படுகிறது இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது…

இந்த கோவிலின் சிறப்புகளை கீழே வரிசையாக காணலாம்..
பாடியவர்கள் : சம்பந்தர், மாணிக்கவாசகர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 14வது தலம்.
சம்பந்தர் பிறந்த தலம்.
சம்பந்தர் பிரம்மதீர்த்தக் கரையில் உமையம்மை முலைப்பால் உண்ட தலம்.
சம்பந்தர் முதல் தேவார பதிகம் பாடிய தலம்.
பிரம்மன் வழிபட்ட தலம். (பிரம்மபுரம்)
சிவனார் மூங்கில் காட்டில் காட்சியளித்த தலம்.(வேணுபுரம்)
சூரனுக்கு பயந்த தேவர்கள் அடைக்கலமான தலம்.(புகலி)
வியாழன் வழிபட்டு குரு தன்மை பெற்ற தலம்.
பிரளய காலத்தில் சிவனார் உமையம்மையுடன் 64 கலைகளை ஆடையாகவும்,சுத்தமாயைத் தோணியாகவும் கொண்டு வந்து தங்கிய தலம்.(தோணிபுரம்)
வராகமூர்த்தி வழிபட்ட தலம். (பூந்தராய்)
ராகு வழிபட்ட தலம்.(சிரபுரம்)
சண்பைப்புல்லால் மாண்ட யாதவ குலத்தோர் பழி பற்றாதிருக்க கண்ணன் வழிபட்ட தலம்.(சண்பை)
நடராஜருடன் வாதாடிய பாவம் போக காளி வழிபட்ட தலம்.(ஸ்ரீ காளி -சீகாழி-சீர்காழி)
மச்சகந்தியை கூடிய கொச்சையாம் பழிச்சொல் தீர பராசரர் வழிபட்ட தலம்.(கொச்சைவயம்)
மலத்தொகுதி நீங்க உரோமசர் வழிபட்ட தலம்.(கழுமலம்)
புறா வடிவில் வந்த அக்னியால் சிபி மன்னன் நற்கதி அடைந்த தலம். (புறவம்)
இத்தலத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் பிரம்மதீர்த்தம்,காளி, பராசர,புறவ நதி,கழுமல நதி, விநாயக நதி ஆகியவை முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.
இந்திரனுக்காக இத்தல இறைவன் மூங்கில் மரமாக காட்சி கொடுத்ததால் மூங்கில் தல விருட்சமாக உள்ளது.
மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு,சிவன்,பார்வதி,லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.பிரம்மா,விஷ்ணு, சிவன்,பார்வதி,லட்சுமி,சரஸ்வதி, மூலவர்,உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான்.
விநாயகர் ருணம் தீர்த்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார்.
கணபாத நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த தலம்.
முருகன்,சூரியன்,சந்திரன்,அக்னி , ஆதிசேஷன்,கேது,வியாசர் முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற தலம்.
வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள்,குழந்தைப்பேறு வேண்டுவோர்கள் வழிபடவேண்டிய தலம்.
பிரம்மபுரீஸ்வரர்,லிங்கவடிவம்,
தோணியப்பர்(ஞானப்பால் தந்தவர்) குருவடிவம்,சட்டைநாதர்,சங்கமவடிவம்.
வாமனர் செருக்குற வடுகநாதர் மார்பிலடித்து வீழ்த்தினார்.பின் லட்சுமியின் வேண்டுகோளுக்கிணங்க விஷ்ணுவை உயிர்ப்பித்தார். விஷ்ணுவின் வேண்டுகோளுக்கிணங்கி எலும்பை சதையாகவும்,தோலை சட்டையாகவும் போர்த்து அருள் செய்த வடிவமே சட்டைநாதர் வடிவமாகும்.
கருவறை வெளிச்சுவரில் சம்பந்தர் வரலாறு ஓவியமாக இருக்கின்றது.
சம்பந்தர் மூல மற்றும் உற்சவ மூர்த்தங்கள். அப்பர்,சுந்தரர், மாணிக்கவாசகர்,வெளியே தனியாக உள்ளனர்.
சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சம்பந்தர் சன்னதி உள்ளது.
மூன்று அடுக்குகளாக கோயில் (பிரம்மபுரீஸ்வரர்,மலை மேல் தோணியப்பர்,அவருக்கு மேல் சட்டைநாதர் தனி சந்நிதியில்)
சோமாஸ்கந்தர் சந்நிதி தனியழகுடன் காண ப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில் இரவு 10மணிக்கு மேல் சட்டைநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெருகிறது.
மூலவர்,அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக இருப்பது மேலும் சிறப்பம்சம்.
சக்திபீடங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது.இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில்11வது பீடமாக அமர்ந்துள்ளது.
பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம்.
பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம்.
அதிக தேவார பதிகங்கள் கொண்ட தலம்.
ஆஸ்தான மண்டபம்,வலம்புரி மண்டபம் மிகவும் சிறப்பானவை.
வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர்களும் காட்சியளிக்கின்றனர். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். இங்கு அசிதாங்க பைரவர்,ருருபைரவர்,சண்டபைரவர், குரோத பைரவர்,உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர்,பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.
18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்த படியே உச்சியிலிருக்கும் சட்டை நாதரை தரிசிக்க முடியும்.
வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி வடை மாலை அணிவித்து பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது.
இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்ம புரீஸ்வரர் திரு நிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.
நடு அடுக்கில் உமா மகேஸ்வரர் உள்ளனர். இவரை தோணியப்பர் என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் தோணிமலை என்கின்றனர்.
தை அமாவாசை,வைகாசி மூலம், ஐப்பசி சதயம் நாட்களில் சம்பந்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெருகிறது.
அம்பாளுக்கு ஆடிப்பூரம், நவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெருகிறது.
சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்ஸவம். இதில் 2ம் நாள் சம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞான சம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
மலைக் கோயிலில் அருள்பாலிக்கும் உமா மகேஸ்வரருக்கு சித்திரை,ஆடி, ஐப்பசி,தை மாதப்பிறப்புகளிலும், திருக்கார்த்திகை,மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களிலும் தைலாபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம்,நவராத்திரி. தை அமாவாசை,வைகாசி மூலம், ஆனி ரோகிணி,ஐப்பசி சதயம் ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.
தரிசன நேரம் :காலை 06:00 முதல் 12:00 & மாலை 04:00 முதல் 09:00 வரை நடை திறந்திருக்கும்.
ஆலய தொடர்புக்கு : 04364-270235, 94430 – 53195.
செல்லும் வழி : மயிலாடுதுறையில் இருந்து 21 கிமீ தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 19 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த சீர்காழி சிவத்தலம்.
ஒருமுறை ஆன்மீக அன்பர்கள் அனைவரும் சீர்காழி தலத்தில் அருள் புரியும் சட்டை நாத பெருமானை வழிபட்டு வாழ்வில் வளமும் நலமும் பெறலாம்…
*ஓம் நமசிவாய*
அறந்தாங்கி சங்கர்