வரும் ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் ஆர்வத்தோடு வேட்பு மனுக்களை தாக்கலில் ஈடுபட்டனர். நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் திங்கட்கிழமை முதல் கட்ட பிரசாரத்தை துவங்குகிறார்.
இதுதொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல் கொடுப்பதற்கும் கமல்ஹாசன், உள்ளாட்சி – உரிமைக்குரல் முதல் கட்ட பிரசார பயணத்தை 27-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் இருந்து தொடங்குகிறார்.
30-ம் தேதியன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் பிரசாரத்தை தொடர்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

