கொரோனா வைரஸ் பரவலால் கிராமப்புற பொருளாதாரம் நிலைகுலைந்துள்ள சூழலில், மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தால் நிறைவேற்ற முடியவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊரக மக்களை ஓரளவாவது பசியில்லாமல் பாதுகாக்க இத்திட்டத்தால் தான் முடியும் எனும் நிலையில், அதற்கான நிதி குறைக்கப்பட்டது நியாயமற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நடைமுறைக்கு வந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் கருவியாகவும், வாழ்வாதார சக்தியாவும் அத்திட்டம் தான் திகழ்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் வேலை செய்தவர்களும், பிழைப்புக்காக பிற மாநிலங்களுக்கு சென்றவர்களும் வேலைகளை இழந்து பெருமளவில் கிராமங்களுக்கு திரும்பி விட்டனர். ஏற்கனவே கிராமங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் தான் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது.
