இயக்குநர் சுராஜ் – வடிவேலு இணையும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடிவேலு மிக நகைச்சுவையுடன் பேசினார்.
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயலலிதா, ரஜினி, விஜய் போல நடிகர் வடிவேலும் ஒரு குட்டி கதையை சொல்லினார். அதனைப் பார்ப்போம்…
ஒரு நோயாளி ஒரு மருத்துவரிடம் சென்று “அய்யா.. மனசே சரியில்லை. நிம்மதி இல்லை.. தூக்கமே வரல. எனக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்கள்” என்று கேட்டான். அதற்கு அந்த மருத்துவர் ”இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை, நீங்கள் திங்கட்கிழமை வாங்க நான் உங்களுக்கு உதவி பண்றேன்” என்று சொன்னார்.
“இல்லங்க.. உண்மையில் எனக்கு மனசு சரியில்லை. தூக்கமே வரமாட்டேங்குது முடியல. என்னை நீங்கதான் காப்பாற்றணும். ஏதாச்சும் உதவி பண்ணுங்க” என்று நோயாளி மீண்டும் கேட்டார். நீங்கள் திங்கட்கிழமை வாங்க என்று மருத்துவர் சொன்னதை நோயாளி கேட்கவே இல்லை.
உடனே மருத்துவர், ”பக்கத்தில் சர்க்கஸ் நடக்குது, ஒரு பபூன் பிரமாதமாக காமெடி பண்றான். நானும் மனைவியும் போக டிக்கெட் வாங்கி வைச்சிருக்கோம். என் மனைவியோட டிக்கெட்டை உன்கிட்ட தர்றேன். நீங்களும் நானும் போய் அந்த சர்க்கஸைப் பார்ப்போம்.
அந்த பபூன் காமெடியைப் பார்த்தால் மனசுல உள்ள பாரமெல்லாம் இறங்கிடும். அதற்கு அப்புறம் ஈசியாகிடுவீங்க” என்று மருத்துவர் சொன்னார். உடனே நோயாளி, “அந்த பபூனே நான்தான்யா” என்று சொல்லியிருக்கிறான். கிட்டத்தட்ட அந்த அளவுக்குத்தான் நான் வாழ்ந்தேன் என வடிவேலு கூறினார்.
