இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளில் வெறும் 10 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள் என்ற தற்போதைய சூழலை மாற்றும் வகையில், ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ எனப்படும் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் 2023-ல் நிறைவேற்றப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள 4,666 எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களில் வெறும் 464 பெண்கள் மட்டுமே உள்ள நிலையில், சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.
இருப்பினும், இந்த இடஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வராமல், 2026-ல் திட்டமிடப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதி மறுவரையறை பணிகளுக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2029-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தான் பெண்களுக்கான இந்த முழுமையான இடஒதுக்கீடு அமலாகும் என்றாலும், தற்போது நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களிலேயே பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இந்திய அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான அலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
