நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டவாது அலையின் பாதிப்பை கருத்தில் கொண்டு, வங்கி கடன் தவணை காலத்தை நீட்டிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று நடைபெற்றது.
அப்போது மனுதாரர் விஷால் திவாரி ஆஜராகி வாதிடுகையில், கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பால் நாட்டில் சுமார் 1 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். எனவே இந்த 2-வது அலை காலத்தில், வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மீண்டும் கடன் தவணையுரிமை காலத்தை நீட்டிக்கும் புதிய திட்டத்தை அறிவிக்க உத்தரவிட வேண்டும். மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கை போதுமானதாக இல்லை எனவும் தனது வாதத்தை வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள், வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மீண்டும் கடன் தவணையுரிமை காலத்தை நீட்டிக்கும் புதிய திட்டத்தை அறிவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், நிதிசார் விவகாரங்களில் நாங்கள் நிபுணர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த விவகாரம் மத்திய அரசின் கொள்கை முடிவுகளின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

