மந்திரங்களில் எப்படி காயத்ரி மந்திரம் உயர்வானதோ, அதே போல் விரதங்களில் உயர்ந்தது ஏகாதசி விரதமாகும். மற்ற ஏகாதசி விரதங்களை விட வைகாசி மாதத்தில் வரும் நிர்ஜல ஏகாதசி கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது.
நிர்ஜல ஏகாதசி நாளில் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பெருமாளை வழிபட்டால் சகல வளங்களையம் பெறலாம். பொதுவாகவே வளர்பிறை ஏகாதசியில் விரதம் இருப்பது எப்படிப்பட்ட பாவங்களையும் போக்கி, இறைவனின் திருவடியை அடையும் வழியை காட்டும் என புராணங்கள் சொல்கின்றன. ஏகாதசி திதி மாதத்திற்கு இரண்டு முறை வருவதாகும். அமாவாசை முடிந்து 11வது நாள் வளர்பிறை ஏகாதசி, பௌர்ணமி முடிந்து 11வது நாள் தேய்பிறை ஏகாதசியாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.
வைணவர்கள் அனைவருமே ஒவ்வொரு மாதமும் வரும் இரண்டு ஏகாதசிக்கும் முக்கியத்துவம் அளித்து விரதமும் இருந்து வருகின்றனர். காரணம் ஏகாதசி தினமானது, மோட்சத்தை அளிப்பதற்கு உரிய தினமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயரும், அந்த நாட்களில் இருக்கும் ஏகாதசி விரதத்துக்கு உரிய பலன்களும் கிடைக்கும் என்றாலும், அனைத்து ஏகாதசி நாட்களிலும் இருக்கும் விரதமும், வைகுண்ட பதவிக்கு நம்மை இட்டுச்செல்லம் என்பது நிச்சயம். வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும் விசேஷமானது.
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள். ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்தது. நிர்ஜல ஏகாதசி நாளில் தண்ணீர்கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது.
பீம ஏகாதசி என்றும் பாண்டவ ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது. இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரருக்கு வியாசர் அருளியுள்ளார்.

பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் ஒரு முறை வியாசரை தரிசித்தபோது மக்கள் பல துன்பங்களில் சிக்கியுள்ளனர். இந்த துன்பங்கள் நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள் என வேண்டினார். “தர்மபுத்திரா, எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, விரதம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை என்று பதில் சொன்னார் வியாசர்.
வியாசர் சொன்னதைக் கேட்ட பீமன், முனிவரே என்னால் அனைத்து ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்க முடியாது. என் வயிற்றில் எரியும் நெருப்புக்கு நான் தீனி போட்டே ஆக வேண்டும். வருடத்தில் ஒரே ஒருநாள் மட்டுமே விரதம் இருக்கும் வகையிலும் அந்த விரதம் இருந்தால் 24 ஏகாதசி விரதம் இருந்த மகிமை இருக்கும் வகையிலும் இருக்க வேண்டும் அப்படி ஒரு ஏகாதசி விரதத்தை சொல்லுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.
வியாசர் சிரித்துக்கொண்டே, கவலைப்படாதே பீமா அப்படி ஒரு ஏகாதசி இருக்கிறது. இது தண்ணீர் கூட குடிக்காமல் இருக்க வேண்டும். அதனால் தான் அது நிர்ஜல ஏகாதசியாக போற்றப்படுகிறது. அந்த விரதம் கடைபிடித்தால் போதும் 24 ஏகாதசி விரதம் இருந்த புண்ணியம் கிடைக்கும் என்று சொன்னார். அந்த விரதத்தை பீமன் கடைபிடித்ததால் பீம ஏகாதசியாகவும் போற்றப்படுகிறது.
இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு புண்ணிய ஆறுகளில் புனித நீராடிய பலனும் பலவிதமான தானங்கள் செய்த பலனும் கிடைக்கும் நேரடியாக வைகுண்டத்திற்கு செல்லும் பேறு கிடைக்கும். வாழ்க்கையில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். நோய்கள் தீரும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இந்த ஏகாதசி விரதம் பற்றி கேட்டவர்களுக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த புண்ணியம் கிடைக்கும்.
நிர்ஜல ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தங்களின் பாபங்களில் இருந்து மட்டுமல்ல நூறு தலைமுறைக்கான முன்னோர்களின் பாவ சுமையும் நீங்கும். அன்றைய தினம் தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் கிடைக்கும். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்டாலே வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நிச்சயம் என்கிறது தர்ம சாஸ்திரம்.

