தமிழகத்தில் மிக முக்கிய விமான நிலையங்களில் சென்னை மீனாம்பாக்கத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று. இங்கு ஆய்வு செய்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பன்னாட்டு முனையத்தில் அதிநவீன வசதியுடன் கூடிய ஆர்.டி.பி.சி.ஆர். மையம் அமைக்க உத்தரவிட்டார்.
இந்த நவீன பரிசோதனை மையம் கடந்த மாதம் 5-ந் தேதி முதல் பன்னாட்டு விமான முனையத்தில் செயல்பாட்டிற்கு வந்தது. இங்கு ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். நவீன பரிசோதனை கருவிகள் மூலம் பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிந்து கொள்ளும் வண்ணம் 3 விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
அதன்படி, 8 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு தெரிய ரூ.900, 2 மணியில் இருந்து 4 மணி நேரத்தில் முடிவை அறிந்து கொள்ளை ரூ.2,500, 30 நிமிடத்தில் முடிவை அறிந்து கொள்ள ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்தி பயன்பெறலாம் என்ற திட்டம் அமலில் உள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கட்டாயமாக ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் 30 நிமிடத்தில் முடிவு தெரிய நிர்ணயிக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகளிம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி, மொத்த கட்டணத்தில் இருந்து ரூ.600-ஐ குறைத்து ரூ.3400 செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

