தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிட்டு வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 832 அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரையில் 7 ஆயிரம் பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு செய்திருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைையொட்டி பயணிகள் வரும் நவம்பர் 2-ந் தேதி பயணம் செய்ய 4 ஆயிரம் பேரும், 3-ந் தேதி பயணம் செய்ய 3 ஆயிரம் பேரும் இதுவரையில் முன்பதிவு செய்துள்ளனர். அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.
சென்ற ஆண்டுகளைப்போல, இந்த ஆண்டும் கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட் எடுப்பது குறைந்து வருகிறது. பெரும்பாலும் ஆன்லைன் வழியாகவே முன்பதிவு செய்யப்படுகிறது. கோயம்பேடு உள்ளிட்ட சில இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டாலும் அங்கு நேரில் வந்து டிக்கெட் எடுப்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர்.
இருப்பினும், தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும் என அவர் கூறினார்.

