யூடியூபரான மாரிதாஸ், மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்வீட் போட்டதாக, திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன், மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாரிதாஸ் மீது 124A, 153-A , 504 505 (1)b 505 ( 2) ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது; வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி வாதிட்டதாவது:
மனுதாரரின் ட்விட்டரில் 2 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் ராணுவ தளபதி இறப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தை உள்ளது. இது, பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய விதமாக உள்ளது..
எதன் அடிப்படையில், எந்த ஆதாரத்தில் இவர் இதனை ட்வீட் செய்துள்ளார் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அவருடைய கம்ப்யூட்டர், மடிக்கணினி போன்றவை குறித்து விசாரணை நடத்த வேண்டும். பின்னர் தான் இவருடைய பின்புலம் தெரியும். மேலும் இவருடைய பல ட்வீட், ஜாதி ரீதியான மத ரீதியான மோதலை தூண்டும் விதமாகவும், தமிழக அரசின் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அரசுத் தரப்பிடம், ”மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின்போதும், அது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததே?’ என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
‘பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ட்வீட்டை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? மாரிதாஸ், தமிழகத்தின் நேர்மைத்தன்மை குறித்தே கேள்வி எழுப்பியிருக்கிறார். மனுதாரர், ஒரு கட்சியைச் சேர்ந்தவர். அவர் தமிழக அரசிற்கு எதிராக, அரசியல் சூழ்ச்சியோடு இந்த ட்வீட்டை செய்துள்ளார்’ என தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
‘முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சுப்பிரமணிய சுவாமியும் சந்தேக கேள்வியை எழுப்பியிருந்தாரே? அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா?’ என நீதிபதி கேட்டார்.
வழக்கு குறித்து புகார் கொடுத்த பாலகிருஷ்ணன் வழக்கறிஞர் புகழ் காந்தி ஆஜராகி, தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க அவகாசம் வேண்டும் என முறையிட்டார்..
மாரிதாசின் வழக்கறிஞர், “இந்த வழக்கு உள்நோக்கத்துடன் பதியப்பட்ட வழக்கு; மனுதாரர் எந்த உள்நோக்கத்துடனும் இப்படி ட்வீட் செய்யவில்லை. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணை நாளை தொடரும் என உத்தரவிட்டு, ஒத்திவைத்தார்.

