Monday, March 16, 2026
HomeUncategorizedஇந்தியாவில் அடுத்த லாக்டவுன்: இரவு நேர ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாடுகள்!

இந்தியாவில் அடுத்த லாக்டவுன்: இரவு நேர ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாடுகள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருவதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள கொரோனா வேரியண்ட் ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் 36 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கொரோனா தொற்றும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. ஒமைக்ரான் கொரோனாவின் மூன்றாவது அலைக்கு வாய்ப்பாக இருக்கலாம் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் அதிக கொரோனா பாசிட்டிவிட்டி விகிதத்தை பதிவு செய்த மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 27 மாவட்டங்கள், கடந்த 2 வாரத்தில் அதிக கோவிட் பாசிட்டிவ் விகிதங்களைப் பதிவு செய்துள்ளன. இந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். கண்காணிப்பு மிகவும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் 3 மாநிலங்களில் உள்ள எட்டு மாவட்டங்கள் 10%க்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 7 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள 19 மாவட்டங்கள் கடந்த இரண்டு வாரங்களில் 5% முதல் 10% வரை கொரோனா தொற்றுகளை பதிவு செய்துள்ளன. எனவே, இந்த 27 மாவட்டங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என ராஜேஷ் பூஷன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், “அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் புதிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட அளவிலான நடவடிக்கைகளை மையமாக கொண்டு நிலைமையைக் கடுமையாக கண்காணிக்க வேண்டியது அவசியம். எந்த மாவட்டத்திலும் தொற்று அல்லது பாசிட்டிவிட்டி விகிதங்கள் அதிகரித்தாலும் தீவிர நடவடிக்கை மற்றும் உள்ளூர் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க கடுமையான கட்டுபாடுகளை விதிப்பதோடு, வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொற்று விகிதங்கள் அதிகரிப்பதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, இரவு நேர ஊரடங்கு, மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்துதல், கூட்டம், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்களைக் குறைத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் ராஜேஷ் பூஷன் தனது கடிதத்தில் பரிந்துரைத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments