நான் ராஜமெளலி சாரோட மிகப் பெரிய ஃபேன், மகாதீரா படம் பார்த்ததில் இருந்து. அதற்கு பிறகு நான் இ படம் வந்த போது தான் நான் சினிமா உலகிற்குள் வந்தேன். அந்த படம் பார்த்த போது ஒரு ஈயை வைத்து இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியுமா என பயங்கர ஆச்சரியமாக இருந்தது. இன்னொரு பக்கம், ஒரு ஈயை வைத்தே படம் எடுக்கிறார்கள் என்றால், நம்மை வைத்து கண்டிப்பாக இங்கு படம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இன்னொரு பக்கம் அது பயம்.
அதே சமயம் ஈயை வைத்து எடுத்தாலே நன்றாக இருக்கு, எதற்காக இவர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைத்து விடுவார்களோ என்ற பயம். அதுக்கு பிறகு அவரின் ஒவ்வொரு படங்களையும் ரசிக்க ஆரம்பித்தேன். எல்லோருக்கும் அவரின் பணி பிடிக்கும். என்னை மிகவும் கவர்ந்தது, இவ்வளவு பெரிய படங்களை, சாதனைகளை செய்து விட்டு அமைதியாக இருப்பது மிகவும் கஷ்டம். அதை தவம் போல செய்கிறார்கள் என நினைக்கிறேன்.

