திரையுலகில் பல்வேறு கலைஞர்கள் மக்களிடம் புகழ்பெற்று விளங்குபவர்கள் அந்த காலம் முதல் இந்தகாலம் வரை பலருண்டு. அதிலும் நடிப்புக் கலைஞர்களுக்கு எப்போதும் தனி மவுசுதான். அவ்வகையில் தமிழ்த்திரையுலகில் தனித்துவமாக கோலோச்சிய பலரில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் சந்திரபாபு அவர்கள்.
1950 காலகட்டத்தில், பெருவெற்றி பெற்ற நடிகராக வலம்வந்தார். ”தன்னை உணர்ந்தவனே எந்தத் துறையாயினும் சாதிக்க முடியும்” என்கிற சித்தாந்தத்தின் அடையாளமாக விளங்கினார் சந்திரபாபு. நவரசங்களில் நகைச்சுவை மட்டும் எல்லோருக்கும் எப்போதும் கைகொடுப்பதில்லை. ஆனால் அதனை மிக லாகவமாகக் கையாண்டு மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றார். நகைச்சுவையில் முகபாவம், உடல்மொழி, சமயோசித வசனங்கள் ஆகியவற்றினை மிகத்துல்லியமாகக் கையாண்டது மட்டுமின்றி, பாடல்கள் பாடுவதிலும் அசகாய சூரராக விளங்கினார்.
பிரபல கதாநாயகர்களுடன் நடிக்கும்போது, காட்சியின் தன்மையை நன்கு உள்வாங்கி, அவர்களையே ஓவர்டேக் செய்யும் வகையில் நடித்து காட்சியை நன்கு மெருகூட்டியவர்.
திரையுலகில் நுழைய கடுமையாகப் போராடி தற்கொலை முயற்சிவரை சென்று போலீஸால் கைது செய்யப்பட்டு, நீதிபதி முன் நிறுத்தப்பட்டார்.
