சித்திரக்குளம் ஐந்தாவது முறையாக நிரம்பியது: மயிலாப்பூர் தெருக்களுக்குள் குளத்துஉபரி நீர் பாய்கிறது!
சென்னை மயிலாப்பூரில் கோயில் குளங்கள் நான்கு உள்ளன. இதில் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சித்திரக்குளம் இரண்டாவது பெரிய குளம் ஆகும். நேற்று காலை முதல் இரவு வரை விடாமல் மழை கொட்டியது. மயிலாப்பூரில் மட்டும் பத்து மணிநேரத்தில் இருபது சென்டிமீட்டர் மழை பதிவானது. கடந்த மாத மழையிலேயே நிரம்பி வழிந்தது சித்திர குளம். இரண்டு வார இடைவெளியில் இரண்டு அடி அளவுக்கு நீர்வற்றி இருந்தது.
நேற்று கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அந்த இரண்டு அடியும் நிரம்பி உபரி நீர் நான்குபுறமும் வெளியேறி தெருக்களில் புகுந்தது. இன்று காலை சுளீரென வெயில் அடித்ததால் மழை நின்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று பிற்பகல் தொடங்கி மழை மீண்டும் வெளுத்து வாங்கியது. ஏற்கனவே குளம் நிரம்பி வழிந்து கொண்டிருந்த நிலையில், குளத்துக்கு வந்த அவ்வளவு உபரி நீரும் தாழ்வான சாலைகளுக்குள் புகுந்து காட்டாறு போல ஓடியது.
சித்திரக் குளம் வடக்கு தெரு, சித்திரக்குளம் தெற்கு தெரு, சோலையப்ப தெரு உள்ளிட்ட பல தெருக்களுக்குள் புகுந்து குளத்து உபரிநீர் ஓடியது. இந்த உபரிநீரைக் கண்டு ஆரம்பத்தில் மகிழ்ந்த அப்பகுதி மக்கள், இப்போது அச்சத்தில் உள்ளனர். மயிலாப்பூரில் கடந்த பத்து ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றிருந்தது. மழை பெய்யும் போது சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நல்ல தண்ணீர் முழுவதும் மயிலாப்பூர் குளங்களுக்குள் வந்து விழுமாறு நடவடிக்கை எடுக்கும்படி கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர். நட்ராஜிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று இந்த நான்கு குளங்களுக்கும், தெருக்களில் ஓடும் மழை நீர் கிடைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை அவர் செய்திருந்தார். அதற்கு உரிய பலன் கிடைத்தது. கடந்த 2 மாதத்தில் சித்திரக்குளம் நிறைந்து வழிவது இன்றோடு சேர்த்து ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

