வாகனங்களில் இ-20 (E20) ரகப் பெட்ரோலைப் பயன்படுத்துவதால், அவற்றுக்கான காப்பீட்டுப் பலன்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், மத்திய அரசின் எத்தனால் கலப்புத் திட்டம் முழுமையான பாதுகாப்புடன் நுகர்வோருக்கு உகந்ததாகவே இருக்கும் என்றும் இந்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதனால் வாகனக் காப்பீடு ரத்தாகிவிடும் அல்லது கிளைம் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தால் வாகனங்களின் இன்ஜின் தரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டே எரிபொருள் விநியோகிக்கப்படுவதால், வாகன உரிமையாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி இ-20 பெட்ரோலைப் பயன்படுத்தலாம் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

