இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகள் இணைந்து நடத்தும் 4-வது பதிப்பு ‘டைவெக்ஸ்-2026’ (IN-SLN DIVEX 2026) கூட்டுப் பயிற்சி கொழும்பு கடற்பகுதியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்காக இந்திய கடற்படையின் ஆழ்கடல் நீர்மூழ்கி மற்றும் மீட்புப் கப்பலான ‘ஐஎன்எஸ் நிரீக்ஷக்’ (INS Nireekshak) கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், இரு நாட்டு கடற்படை வீரர்களும் ஆழ்கடலில் மூழ்கிச் செய்யும் மீட்புப் பணிகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களைப் பாதுகாக்கும் நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்துத் தடையற்ற ஒருங்கிணைந்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் ‘மகாசாகர்’ (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்நிகழ்வில், இலங்கை கடற்படைக்கு 50,000 தோட்டாக்கள் மற்றும் அவசர மருத்துவச் சிகிச்சைக்கான ‘பீஷ்ம் க்யூப்ஸ்’ (BHISM cubes) ஆகியவற்றை இந்தியா வழங்கியுள்ளது.
இந்தத் தடையற்ற ஒருங்கிணைப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான கடல்சார் பாதுகாப்பையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
