இவரது தந்தை யார் என்பது குறித்த சர்ச்சை இன்னும் தீரவில்லை. தாயார் கிளேடிஸ் வறுமையிலும் பிறகு மனநோயாலும் பாதிக்கப்பட்டார்.
என் கதை என்கிற தலைப்பில் மர்லின் மன்றோ எழுதிய கட்டுரையில் தனது தாய் எப்போதும் கத்தி கொண்டும் சிரித்தும் கொண்டும் இருந்தார் என்று எழுதுகிறார்.
ஒரு கட்டத்தில் கிளேடிஸ் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மர்லின் மன்றோ அனாதை காப்பகங்களில் வளர்ந்தார்.
16 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதல் கணவர் போரில் வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு மன்றோ போர் உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்ய தொடங்கினார். அங்கே ஒரு புகைப்படக்காரர் மர்லினை கண்டுபிடித்தார்.
‘பின் அப்’ புகைப்படங்களுக்காக கவர்ச்சி போஸ் கொடுக்க தொடங்கினார். இடையில் பணக் கஷ்டத்திற்காக 50 டாலருக்காக ஒரு கேலண்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தார். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார்.
கவர்ச்சியும் சிறுமித்தனமான சேஷ்டைகளும் அவரைப் புகழ் ஏணியின் உச்சியில் ஏற்றியது. அமெரிக்காவின் மறக்க முடியாத கனவு கன்னி என பெயர் பெற்றார் மர்லின் மன்றோ.
அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் அவரை ‘எல்லா காலங்களிலும்’ சிறந்த நடிகை என புகழ்கிறது. டிவி கைட் நெட்வொர்க் திரைப்படங்களிலே கிளாமரான நடிகைகளில் நம்பர் ஒன் என்கிற அந்தஸ்தினை அளித்து இருக்கிறது.
மர்லின் மன்றோ ஹாலிவுட்டில் புகழ் உச்சியில் இருந்த சமயம் அவர் வறுமை காலத்தில் நிர்வாணமாய் கொடுத்த போஸ் பற்றிய தகவல் வெளியானது. இந்தப் புகைப்படத்தில் இருப்பது மர்லின் மன்றோவே இல்லை என சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் சொல்ல திட்டமிட்டன.
ஆனால் மன்றோ அது தன்னுடைய புகைப்படம் தான் என்றும் வறுமைக் காலத்தில் அப்படி போஸ் கொடுத்தேன் என்றும் பேட்டி கொடுத்தார்.
இந்தப் பேட்டி சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் பயந்ததற்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியது.
அவருடைய தாயின் மனநோய், அனாதை இல்லங்களில் கழிந்த அவரது இளமைக்காலம், எங்குச் சென்றாலும் அவருக்கு நேரிட்ட பாலியல் தொந்தரவுகள் பற்றிய கதைகள் பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன.
அவருடைய திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற தொடங்கின. பொருளாதாரம் வளர்ந்தாலும் மன்றோவின் தனிப்பட்ட வாழ்க்கை பல சவால்களைச் சந்தித்தபடியே தான் இருந்தது.
கணவர்கள் மாறி கொண்டே இருந்தார்கள். திரைப்படங்கள் பெரும்பாலும் அவரை வெகுளி போல சித்தரித்தாலும் உண்மையில் மன்றோ அறிவாற்றல் மிக்கவராகவே இருந்தார்.
புகழ் பெற்ற இலக்கியவாதியான ஜான் மில்லரைத் திருமணம் செய்து கொண்டார். சொந்த திரைப்பட நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டார். மற்றொருபுறம் அதீத புகழ் மர்லின் மன்றோவின் குணத்தை மாற்றி கொண்டிருந்தது.
பொது இடங்களில் அவர் அணியும் உடைகள் அவர் நடந்து கொள்ளும் முறைகள் விமர்சிக்கப்பட்டன. தூங்க இயலவில்லை என மன்றோ உளவியல் நிபுணர்களை நாடி சென்றார். ஆனால் போதை மருந்திற்கு அடிமையானார்.
பல ஆண்களோடு தொடர்பு வைத்து கொண்டதாகவும் கிசுகிசு உண்டு. அமெரிக்க ஜனாதிபதி கென்னடியும் இதில் அடக்கம் என்பார்கள். ஒரு கட்டத்தில் ஷுட்டிங் ஸ்பாட்களிலே அவருடைய நடத்தை தாங்க முடியாத அளவு மாறியது என்கிறார்கள்.
இதனால் திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஏற்கெனவே ஒப்பு கொண்ட சினிமாக்களில் நடிக்க மறுக்கிறார் என்கிற புகார்கள் எழுந்தன.
திரைப்பட நிறுவனங்கள் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அவருடைய உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சரியும் தன் புகழை மீட்பதற்காக மன்றோ பல நிர்வாண புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்தார். சர்ச்சைக்குரிய பேட்டிகள் அளித்தார்.
மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் பெருக தொடங்கிய சமயத்தில் தனது 36வது வயதில் இறந்து போனார். அதிகளவு போதை மருந்து உட்கொண்டதால் இறந்தார் எனவும் தற்கொலையாகவும் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
மர்லின் மன்றோ கொல்லப்பட்டார் என்றும் கென்னடி இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்றும் அமெரிக்க உளவு நிறுவனத்தின் சதி என்றும் இல்லை இது மாபியா கும்பலின் கைவரிசை என்றும் பல கதைகள் பிறகுப் புனையப்பட்டன. அமெரிக்காவின் தீர்க்கப்படாத மர்மங்கள் வரிசையில் மர்லின் மன்றோவின் புதிர் மரணமும் இடம் பெற்று விட்டது
