1000 ஆண்டுகள் பழமையான கஷ்டம் தீர்க்கும் #காவனூர் காளி குன்றத்தூர் அடுத்த காவனூரின் (#சிறுகளத்தூர்) பழம்பெரும் கிராம தேவதையாகத் திகழ்ந்து வருபவளே அன்னை நளியம்மன் என்கிற நாளியம்மன் ஆவாள்…
குன்றத்தூர் அடுத்துள்ள காவனூர் , சிறுகளத்தூர் , சரசுவதி நகர் , கலெத்திபேட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியனைத்திற்கும் #எல்லைத்தெய்வமாக ,
வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை வாரிவழங்கும் அருட்சக்தியாக அன்னை நாளியம்மை இத்திருவூரில் கோயில் கொண்டு அருள்புரிந்து வருகின்றாள்.
நளி என்பதற்கு ” குளிர்ச்சி ” என்று அர்த்தம். நளியம்மன் என்பதற்கு குளிர்ச்சியானவள் , குளிர்ச்சியை உடையவள் , குளிர்ச்சியான இடத்தில் திகழ்பவள் என்று பொருள்படும்.
அதற்கேற்ப இவ்வன்னையின் ஆலயமும் #செம்பெரும்பாக்கம் ஏரி என்னும் செம்பரம்பாக்கம் ஏரியின் கரையிலேயே குறிப்பாக பிரதான மதகுகளுக்கு மிக அருகிலேயே திகழ்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீரால் எப்போதும் தண் என்ற குளிர்ச்சியை உடைய இடமாக இக்காவனூர் விளங்குவதால் இவ்வன்னைக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். இப்பெயரே நாளடைவில் நாளியம்மனாக மருவியுள்ளது.
பர்வதவர்த்தனி அம்மையோடு இராமநாதேசுவரர் கோயில் கொண்டுள்ள காவனூர் குன்றின் வடபுறத்தில் வடக்கு திசை நோக்கியவாறு எட்டுகரங்களுடன் சும்பநிசும்பர்களை அழிக்கும் கோலத்தில் கைகளில் சூலம் , கத்தி , கேடயம் , உடுக்கை , மணி , குறுவாள் , கபாலம் போன்ற ஆயுதங்களோடு காதில் பிரேத குண்டலம் அணிந்து அன்னை நிசும்பசூதனியாக காட்சி தருகின்றாள்.
சோழர்காலத்தில் போருக்குச் செல்லும் முன்னர் இவ்வன்னைக்கு உயிர்க்கொடை அளித்த பின்னரே போர்களம் புகுவர்.
உயிர்கொடையை ஏற்ற அன்னை மகிழ்ச்சியுற்று தங்களின் வாளுக்கு வெற்றியைத் தருவாள் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்துள்ளது.
பகையை அழித்து வாழ்வில் வெற்றியையும் வேண்டும் செல்வநலன்கள் அனைத்தையும் தருபவளாக அன்னை நாளியம்மை கொலுவீற்றிருந்து அருள்புரிந்து வருகின்றாள்.
வீடு , மனை , புத்திரப்பேறு வேண்டுவோர் மற்றும் குறிப்பாக வாய்விட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு எதிரிகளாலும் ஏனையோர்களாலும் இன்னல்களுக்கு ஆளானோர் அமாவாசை அன்று அன்னைக்கு அபிடேக ஆராதனை செய்து புத்தாடை சாற்றி நல்ல நறுமணம்மிக்க மலர்களான மல்லிகை முல்லை தாமரை தவனம் மரிக்கொழுந்து உள்ளிட்ட மலர்களைச் சூட்டி வில்வ இலையால் அர்ச்சனை செய்திட சகல பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவர் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை..

