உலகத்தில் உள்ள அனைத்து ஆண், பெண் ஜீவ ராசிகளும், இயற்கையின் ஏற்பாட்டால், இனச் சேர்க்கைக்காக கூடுகின்றன. அதுவும் குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே, உடல்களால் புணர்கின்றன. ஆனால் ஆறறிவைக் கடந்து, ஏழாம் அறிவிற்குள்ளும் எட்டிப்பார்க்கும் மனிதப் பிறவி மட்டும் எப்போதெல்லாம் மனமும், உடலும் உந்தப்படுகிறதோ அப்போதெல்லாம் தன் காம இச்சையைத் தீர்த்துக் கொள்ள வடிகால் தேடுகிறது.
கலாச்சாரம், பண்பாடு அடிப்படையில் திருமணச் சடங்கு நடந்து முடிந்ததும், அடுத்து என்ன? உடல் புணர்வுதானே… அதற்காக அந்த சடங்கில் உடனே இறங்கி விடுகிறார்களா என்ன?
”தாலிகட்டும்” வைபவமான திருமண முகூர்த்தம் முடிந்ததும், சில விளையாட்டுகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் புதுமணத் தம்பதிகளை முன்னிலைப்படுத்தி, இரு குடும்பத்தார் முன்னிலையில் நடைபெறுகின்றன. அதன் மூலம் தம்பதிகளின் மனம் இனம்புரியாத அச்சம், மற்றும் படபடப்பிலிருந்து மெல்ல, மெல்ல வெளிவரத் தொடங்குகிறது.
புத்தம் புதுத்தம்பதிகளுக்கிடையே ஒரு நல்லிணக்கமும், ஈர்ப்பும் ஏற்படுவதற்காகத்தான் , அவரவர் குடும்பத்தின் பாரம்பரியப்பழக்க வழக்கங்களின்படி சிறு சிறு சடங்குகளும், சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. இவையெல்லாம் உளவியல் ரீதியிலான சமாச்சாரங்கள்.
மன உணர்வு சார்ந்த சம்பிரதாயங்கள் பகல்வேளையில் நிறைவேறியபின் இதே போல்தான் திருமணத்திற்குப்பிறகு வரும் ”சாந்தி முகூர்த்தம்.”
பருவ வயதை எட்டியதும், ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்கள் உடலில் நடக்கும் வேதியல் மாற்றங்கள், ஒரு தீர்வுக்காக எதிர்நோக்கத் தொடங்குகின்றன. அந்த தீர்வினைத் தருவது, ”திருமண பந்தம்” ஆகும் . இல்லறத்தின் நுழைவாயில்தான் ”சாந்தி முகூர்த்தம்” . இச்சொல் தமிழ்ச் சொல் அல்ல. இதற்கு தூய்மையான தமிழ்ச்சொல் “முழுத்தம்” ஆகும்.
ஆனால், காலப்போக்கில் சமூகப்புரட்சி, மாற்று மதங்களின் தாக்கம் ஆகியவற்றால் சொற்கள் பலவும் பிறழ்ந்து போயின. அவற்றில் பிறழ்ந்து பரிணமாம் கொண்ட வார்த்தையே “முதலிரவு” எனும் வார்த்தையாகும். இதுவும் இப்போது மருவி ”மேட்டர்(MATTER) பண்ணியாச்சா? அல்லது முடிஞ்சிடுச்சா? ” என்றெல்லாம் கேவலமாக பேசப்படுப்பகிறது. இவை போன்றவற்றால்தா நம் பாரத நாட்டின் பண்பாட்டின் சிறப்புகள் சிதைக்கப்படுகின்றன.
சரி விஷயத்திற்கு வருவோம்…
“சாந்தி” என்றால் “அமைதியடைதல்” அல்லது “தணிதல்” எனலாம். முகூர்த்தம் என்பது ஜோதிடத்தின் அடிப்படையில் ராசிக் கட்டங்கள் பன்னிரண்டிலும் உயிர்க்கட்டமானது ”லக்னம்” இந்த லக்னமானது, ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை மாறக்கூடிய சுழற்சியில் இருப்பது. அந்த ஒன்றரை மணிநேரமே ஒரு ”முகூர்த்தம்” எனப்படுகிறது.
ஆக, திருமண பந்தம் ஏற்படும் வரை இயற்கையின் தூண்டுதலால், உடலும் மனமும் கொதிநிலையில் இருக்கும். அந்த கொதிநிலையானது “தணிகின்ற நேரம்” அல்லது “தணிக்கப்படுகின்ற நேரம்” என பொருள் தருவதே “சாந்தி முகூர்த்தம்” ஆகும்.
இத்தகைய சாந்தி முகூர்த்தமானது, சந்ததி உருவாக்கத்திற்கான முதல்படிநிலை. தம்பதிகளின் அந்திமகாலத்திற்குப்பின் பித்ருக்கடன் எனப்படும் கடமையை ஆற்ற, சமூகத்தில் நன்மக்களாக ஆக்கம் பெற்ற குழந்தையாகப் பெற்றெடுப்பதற்கான முயற்சி.
ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் கணிப்பது நடைமுறை. ஆனால், அந்தக் குழந்தைக்கான ”ஆரம்ப விதை எப்போது விதைக்கப்பட வேண்டுமென” நம் சாஸ்திரங்கள் ஜோதிடத்தின் அடிப்படையில், ராசி நட்சத்திரங்களைக் கொண்டு வகுத்துள்ளன.
அந்த நட்சத்திரங்கள் :
”ரோகிணி, உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, அஸ்வினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், சித்திரை, அவிட்டம்” ஆகியன. இல்லறம் நல்லறமாகி சிறந்தோங்க , இந்த நட்சத்திரங்கள் சாதகமானவை என கணிக்கப்பட்டுள்ளன.
அதிலும், புதுமணத்தம்பதிகளின் ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரங்களின் சேர்க்கையினால் வரக்கூடிய பலன்கள்,
மேலும் அவர்கள் இருவரின் நட்சத்திரங்கக்கும் இணக்கமான பலன்களை வழங்கக்கூடிய நட்சத்திரத்தின் பயணம் நிகழும் நேரத்தில் ”சாந்தி முகூர்த்தம்” நிகழ்ந்தால், அந்த தம்பதியர் வாழ்வும், சிறக்கும் என நம் முன்னோர்கள் அனுபவ ரீதியில் தாங்கள் உணர்ந்ததுடன் நமக்கும் உணர்த்தியுள்ளனர்.
