பாட்டும் நானே பாவமும் நானே..’ என தன் குரலில் பாடலையும் பலவித பாவனைகளில் கொடுத்து இசை ரசிகர்களை இன்றும் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் டி.எம்.எஸ் எனப்படும் டி.எம்.சௌந்தரராஜன், மதுரையில் தொடங்கி உலகையே வலம் வந்த பாடகராக புகழ் பெற்ற இவர்,
தமிழிசை வரலாற்றில் தன் பேரை நீங்காத ஒன்றாக எழுதிய பெருமைக்குரியவர். தன் தனித்துவமான குரலால் தமிழ் பக்தி இசை மரபுக்கு அவர் செய்த கொடை மிகவும் அதிகம்…40 ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடிய இந்த சிம்மக்குரலோனுக்கு இன்று 11வது நினைவு நாள்.
‘பாடகர் திலகம்’, சிங்கக் குரலோன்’, ‘இசை சக்கரவர்த்தி’, இசைக்கடல்’, ‘எழிலிசை மன்னர்’, ‘குரலரசர்’, ‘டாக்டர்’ பட்டம் போன்ற பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார். சினிமா பாடல்களை தவிர பக்தி பாடல்களிலும் உச்சம் தொட்ட இவர், மிக சிறந்த முருகபக்தர் ஆவார்.
கிட்டத்தட்ட 2500 பக்தி பாடல்களை பாடி இன்றும் நம்மை பரவசத்தில் ஆழ்த்திவரும் இவரது பாடல்களில், உள்ளம் உருகுதய்யா முருகா… கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்… சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா… போன்ற முருகனை உருகிப்பாடும் பாடல்கள் காற்றில் நிறைந்து முருகன் புகழை இன்றும் பாடி கொண்டிருக்கிறது.
