திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை (நவ.2ம் தேதி) சனிக்கிழமை தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
நாளை அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.
அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.
2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
விழா நாட்களில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொள்ளும் வகையில் 18 இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

