இன்று எத்தனையோ நடிகர் நடிகையருக்கு ரசிகர்கள் மன்றங்கள் அமைத்து அதன் மூலம் நற்பணிகள் செய்து வருகின்றனர்.
ஆனால், இவர்களுக்கெல்லாம் முன்னோடி யார் தெரியுமா? அவர்தான் ”அப்பூதியடிகள்”.
ஆம்… சைவநெறி தழைத்தோங்க சிவத்தொண்டினை வாழ்நாள் முழுவதும் செய்து, 63 நாயன்மார்களில் ஒருவராக, முதன்மை நால்வரில் ஒருவராகி வணங்கப்பட்டுவரும் திருநாவுக்கரசரின் ஆத்மார்த்தமான ரசிகரே “அப்பூதியடிகள்” .
தமிழகத்தில் கி.பி.ஏழாம் நூற்றாண்ட்டில் வாழ்ந்த பெருமகனார் சிவதொண்டர் “திருநாவுக்கரசர்” . சிவாலயங்களில் உழவாரப்பணி செய்துவந்தமையால் “உழவாரத் தொண்டர்” என்கிற சிறப்புப்பெயரும் பெற்றவர். சிவபெருமான் மீது 49,000 தேவாரப்பதிகங்கள் பாடி தன் அளப்பரிய பணியினைக்கூட “என் கடன் பணிசெய்து கிடப்பதே” என தன்னடக்கத்துடன் விளங்கியவர்.
இக்காலத்தில் ஒரு நடிகரையோ நடிகையையோ திரையில் கண்டு, அவர்தம் கலைத்திறனில் தங்கள் மனதைப் பறிகொடுத்து ரசிகர் – நற்பணிமன்றங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில் அந்த ரசிகர் தனக்குப் பிடித்தமான அந்த நடிகர் நடிகையை ஒருமுறைகூட நேரில் சந்தித்திருக்க மாட்டார். ஆனாலும், அப்படி ஓரு ஈர்ப்பு !
திரைப்படங்கள் , தொலைக்காட்சிகள் , இணையதள சேவை இப்படி ஏதுமே இல்லாத ஏழாம் நூற்றாண்டில் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் திருநாவுக்கரசர் – அப்பூதியடிகள் ஆகிய இருவரும். ஆனால் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததே கிடையாது. இருப்பினும் திருநாவுக்கரசரின் தொண்டுள்ளம், தமிழின்பால் அவர்கொண்ட பற்று , அதில் அவர் பெற்றிருந்த ஞானம், அதீத நற்பண்புகள் ஆகிய அனைத்தையும் சான்றோர்கள் கூறக்கேட்டதனால் அப்பூதியடிகளுக்கு திருநாவுக்கரசர் மீது அபிரிதமான ஈர்ப்பு உண்டாயிற்று. மனதார நேசித்தார் என்பதை விட , சிவபெருமானுக்கு இணையாக அவரை பூசிக்கவும் தொடங்கிவிட்டார். அப்பூதியடிகளின் மனைவியும் கணவனின் அறச்செயல்களுக்கு ஆதாரமாக விளங்கினார்.
திருநாவுக்கரசர் மீது கொண்ட அளப்பரிய ஈடுபாட்டால் சாலைகள் அமைத்தல், குளங்கள் வெட்டுதல், அன்னதானம் செய்தல், நீர்மோர்ப் பந்தல் அமைத்தல், அந்த பந்தலுடன் ஏழை எளியவர்கள், அடியவர்கள் தங்கி இளைப்பாறிச் செல்லும் வசதி அமைத்து கொடுத்தல், தானதர்மங்கள் செய்தல் என எத்தனையோ நற்பணிகளை செய்து வந்தார். அவை அத்தனைக்கும் சிவபெருமான் பெயரைக்கூட வைக்கவில்லை. தன்னை பெரிதும் ஈர்த்த, “திருநாவுக்கரசர்” பெயரையே சூட்டினார். எங்கும் எப்போதும் தன் பெயரை முன்னிலைப்படுத்தியதே இல்லை. தன் மகன்களுக்குகூட “மூத்த திருநாவுக்கரசு”, “இளைய திருநாவுக்கரசு” என்று பெயர் சூட்டி வணங்கி அழைத்தார். அத்தகைய நற்குணங்களால் அப்பூதியடிகள் உள்ளூர் மக்களால் வணங்கப்படும் நிலையில் விளங்கினார்.
ஒருமுறை திருநாவுக்கரசர் அப்பூதியடிகள் வாழ்ந்துவந்த ”திங்களூர் “ என்னும் ஊருக்கு வருகை தந்தார். திங்களூர் மர்றும் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் “திருநாவுக்கரசர்” என்கிற பெயரில் நற்பணிகள் நடைபெறுவதைக் கண்டு ஆச்சரியமுடன் உள்ளூர்க்காரர்களை விசாரிக்க அவர்கள் அப்பூதியடிகளின் பெருமையை வானளாவக் கூறினர். ஆகையால் திருநாவுக்கரசர் அப்பூதியடிகளை நேரில் சந்திக்க விருப்பம் கொண்டு, அவரது இல்லத்தை விசாரித்தபடியே சென்று சேர்ந்தார்.
தனது இல்லத்திற்கு வந்து சேர்ந்தவர் திருநாவுக்கரசர் என அறியாமலேயே அவர்தம் சிவனடியார் தோற்றத்தைக் கண்டு அப்பூதியடிகள் வணங்கினார். அப்போது தன்னை யாரென்று தெரிவிக்காமலேயே, “நற்பணிகள் அனைத்தையும் நீங்கள் செய்ய, ஏன் யாரோ ஒருவரின் பெயரால் செய்கிறீர்கள்?” என்று திருநாவுக்காரசர் கேட்டார். அதற்கு, அப்பூதியடிகள் சற்று வருத்தம் மேலிட, “திருநாவுக்கரசரைப் பற்றி யாரோ என எப்படி தாங்கள் கூறலாம்? ” என கேட்டு, அவரைப் போற்றும் காரணங்களாக அவர்தம் பெருமைகளை பட்டியலிட்டார்.
அவையனைத்தையும் கேட்ட நாவுக்கரசர் மனம் நெகிழ்ந்து போனார். அதன் பிறகு தான் யாரென்று கூறினார். அப்போது அப்பூதியடிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தன் குடும்ப சகிதமாக அவர்தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, தங்கள் இல்லத்தில் உணவருந்துமாறு பணிந்து வேண்டினர். திருநாவுக்கரசரும் அவர்தம் வேண்டுகோளை ஏற்றார்.
