சனாதன தர்மம் :
நமது உடலில் பழைய செல்கள் சிதிலமடைந்த வண்ணம் இருக்க, புதிய செல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. அதுபோல் சனாதன தர்மமான, தற்போது ”இந்து”என்கிற ஒற்றைச்சொல்லில் அழைக்கப்பட்டு வரும் தர்மமானது காலபரிணாமத்திற்கேற்றவாறு அவ்வப்போது தன்னை புதுப்பித்துக் கொண்டே பயணிக்கிறது.
”ஆதி எது?“ என்பதே அறியப்படாத வகையில் இன்றும் தழைத் தோங்கும் “சனாதன தர்மத்தில்” எத்தனையோ ஞானிகள், மேதைகள், அருளாளர்கள் அவ்வப்போது தோன்றிய வண்ணம் இருக்கிறார்கள். புதுப்பாதைகளுக்கான வழிகளை காண்பித்து வருகிறார்கள்.
கிடைத்தற்கரிய மானிடப்பிறப்பெடுத்த அனைவரும் எவ்வுயிரும் இன்புற்று வாழ, தன்னாலான பணிகளைச் செய்யத் தூண்டுவதே அருளாளர்களின் அரிய பணிகளாக இருந்து வருகின்றன . ஆழ்ந்த கருத்துக்கள் அனைத்தும் சமூகத்தின் அறிவையும், பண்புநலன்களையும் செழுமைப்படுத்துவதற்காகவே.
பாரததேசத்தில் வாழையடி வாழையாக தோன்றிய மாபெரும் அருளாளர்கள் வரிசையில் வந்துதித்தவரே ”வள்ளலார்” என்று அடியவர்களால் அகம்மகிழ அழைக்கப்படும் ”வடலூர் இராமலிங்க சுவாமிகள்” என்னும் பேரறிவாளர்.
