தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி நீடிப்பது மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏன் தாமதம் செய்கிறார் என்ற கேள்வி வலுத்துள்ளது.
ஆதரவு கடிதங்களில் உள்ள உண்மைத்தன்மை மற்றும் அசல் கடிதங்கள் குறித்து ஆளுநர் தரப்பு விளக்கம் கேட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்து வரும் நிலையில், மறுபுறம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தவெக ஆட்சியமைக்கத் தார்மீக அடிப்படையில் உரிமை உள்ளதாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வளவு நெருக்கடிகளும், சட்டப் போராட்டங்களும் ஒருபுறம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், கட்சியின் தலைவர் விஜய் மட்டும் இன்னும் மௌனமாக இருப்பது ஏன் என்ற மில்லியன் டாலர் கேள்வி ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.

